
டீனேஜில் எனக்கு நவராத் திரி கொலு என்றாலே அலர்ஜி!
படிக்க விடாமல், பிரை வஸி இல்லாமல், ஒரே கலாட்டா செய்கிறார்களே!"
என்று வெறுப்பாக இருக்கும். அன்றாட வேலை அதிக மாகி விடும்; வீட்டு
ஹாலின் பெரும் இடத்தை கொலுப்படி அடைத்துக் கொள்ளும் என்பதாலும் பல
சமயம் நியூசென்ஸாகக் கருதுவேன்.

‘ஸ்ரீ சக்ர ராஜ’, ‘கற்பூர
நாயகியே’, ‘மாணிக்க வீணை ஏந்தும்’ என்று எல்லா வருடமும் ஒரே
பாடலைப் பாடும் பெண்களுக்கு, அவர் தம் முத்திரைப் பாடல்களை வைத்து,
‘வீல்ஸ்’, ‘கற் பூரம்’, ‘டொய்ங்... டொய்ங்’ என்று பட்டப் பெயர்கள்
சூட்டிச் சிரிப்போம். மொத்தத்தில் கொலு வைப்பது ஒரு ஏ.வ.ப! (ஏண்டா
வருகிறது பண்டிகை!)
ஒருமுறை, என்னுடைய அப்பா, கொலு வைப்பதன்
தாத்பரியத்தை விளக்கினார்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு
மனிதனுக்கும் முதல் தேவை, உயிர் பிழைத்தல்தான்! அதாவது SURVIVAL.
அதற்கு நீரும், உணவும் தேவை.
அடுத்த தேவை... ஆடை, வீடு,
அணிகலன், வாகனம் போன்றவை. அதாவது GROWTH. அதற்கு தொழில் நுட்ப
அறிவும் பணமும் தேவை.
அடுத்த தேவை... உயர்நிலை. அதாவது
SUBLIMITY. உயிரும் பொருளும் பெற்றதோடு நில்லாமல், ஞானத்தை
அடையவும் முயற்சித்து, அதை எட்டும் போதுதான் அவன் முழு
மனிதனாகிறான்.
இதன் அடிப்படையில் தான் நவராத்திரி கொலுவின்
ஒன்பது படிகளும் வைக்கப் படுகின்றன.
கீழே உள்ள மூன்று
படிகளில் உயிர் வளர்க்கத் தேவையான அடிப்படைப் பொருள்களைக்
காட்சிக்கு வைக்கிறோம்.
(மண், வயல், நதி, உழவன், கறவை,
பறவை, தானியம், காய்கனி போன்றவை)
நடுவிலிருக்கும் மூன்று
படிகளில் நமது வளர்ச்சியையும் பாதுகாப்பையும் எடுத்துக்காட்டும்
பொருள்கள் இடம் பிடிக்கின்றன.
(நவீன வீடுகள், நாணயங்கள்,
வாகனங்கள், நூதனப் பொருள்கள், நாகரிக மனிதர்கள், ராஜாராணி,
சிப்பாய்கள் போன்றவை.)
மேலே உள்ள மூன்று படிகளில்
ஞானத்தைக் குறிக்கும் கலையை வளர்க்கும் அம்சங்கள், தெய்விகக்
குறியீடுகள் வைக்கப்படுகின்றன.
(கலைஞர்கள், மகான்கள்,
கடவுள் சிலைகள் போன்றவை)
உயிர்களை ஜனிக்க வைப்பவள்
துர்க்கை.
பொருள் வளம் தருபவள் லக்ஷ்மி.
ஞானம்
தருபவள் சரஸ்வதி.
இதன் அடிப்படையில்தான் முப்பெரும் தேவியரை
வணங்கி, மூன்று சக்திகளுக்கு மூன்று ராத்திரிகள் என நவராத்திரி
கொண்டாடி மகிழ்கிறோம்!’ என்று என் தந்தை சொன்ன போதுகூட, நான் அதை
ஏதோ ஒரு கதை போலத்தான் கேட்டுக் கொண்டேன்.
சில வருடங்கள்
கழித்து, கல்லூரியில் படிக்கும்போது ஆல்ஃபிரட் மார்ஷல்,
ஹெர்ஸ்பெர்க், மாஸ்லோ போன்ற பொருளாதார, மனவியல் நிபுணர்களின்
தியரிகளைப் படித்தபோது, அவை நமது நவராத்திரிக் கோட்பாடுகளுடன்
அச்சு அசலாக ஒத்துப் போவதைக் கண்டு அசந்து போனேன்.
முதலில்
உயிர் பிழைத்தாலே போதும் என்ற கீழ்நிலை. பிற்பாடு, வசதிகளைப்
பெருக்கிக் கொள்ளும் ஆர்வம். கிடைத்த செல்வத்தைப் பாதுகாக்கும்
முயற்சிகள்... எல்லாம் ஓரளவு கிடைத்தபின், கலை, இலக்கியத்தில்
நாட்டம்... அதைத் தொடர்ந்து ஞானமும் மோனமும் வேண்டும் உயர் நிலை.
அதைப் பெறவே... இந்த மனிதப்பிறவி. எல்லாமே படிப்படியான உயர்வு!
நமது வாழ்வின் நோக்கத்தை, மரபின் மாண்பை, சிறு பொம்மைகளை
வைத்தே, இதை விட எளிமையாகச் சொல்லித் தர நமது முன்னோர்களைத் தவிர
வேறு யாரால் முடியும்?
அந்தப் பிறவி ஞானஸ்தர்களை வணங்கிக்
கொண்டாடுவோம்...
Top