
எனக்கு சுமார் மூன்று வருடங்களாக காலை முதல் இரவுவரை மூச்சு விட
சிரமமாக உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை இல்லை. வயது 64.
சோதித்ததில் செப்டல்டீவியேஷன் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.
சாம்பிராணிப் புகை, மழை இதெல்லாம் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால்
இரவிலிருந்து காலைவரை எந்தப் பிரச்னையும் இல்லை.
-
ஜி.எஸ்.சுவாமிநாதன், சென்னை - 41
டாக்டர் எஸ்.ஆர்.ரவி (காது, மூக்கு, தொண்டை நிபுணர்):
உங்களுக்கு நேஸல் மற்றும் பிரான்கியல் அலர்ஜி இருக்கும்போல்
தோன்றுகிறது. நீங்கள் விழித்திருக்கும் நேரத்தில் உங்களைச்
சுற்றி உள்ள காற்று மண்டல தூசு சுவாசத்தினால் மூக்கினுள்
செல்லும் போது, மூக்கில் உள்ள திசுக்கள் மூச்சுக் காற்று வழியை
அடைக்கின்றன. இதற்கு நீண்ட கால அலர்ஜி சிகிச்சை தேவைப்படும்.
ஈ.என்.டி மருத்துவர் மட்டுமின்றி, இதயம் சம்பந்தமான அல்லது பொது
நல மருத்துவர் யாரிடமாவது சென்று மார்பு எக்ஸ்ரே எடுக்க
வேண்டும். மூக்கு, மார்பு பரிசோதனைகள் மூலம் ஆஸ்துமா இருக்கிறதா
என்று கண்டறியவும்.
என் வயது 77. மூன்று வருடங்களுக்கு முன்பு
சிறுநீர் போவதில் பிரச்னை ஏற்பட்டு லாப்ராஸ் கோப்பி முறையில்
புரோஸ்டேட் சுரப்பி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். சமீபத்தில்
ரத்தப் போக்குடன் சிறுநீர் போனது. உடனே சிகிச்சை செய்ததில்
நின்று விட்டது. இனி இவ்வாறு ரத்தப் போக்கு ஏற்படாதிருக்க என்ன
செய்யலாம்?
- ஜி.ஆர். ராகவன், கரூர்
டாக்டர் கார்த்திக்
குணசேகரன் (யூரோ கைனகாலஜிஸ்ட்):
சிறுநீரில் ரத்தப் போக்கு
ஏற்பட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிறுநீர்க் கிருமித்
தொற்று (யூரினரி இன்ஃபெக்ஷன்) இருக்கலாம். சிறுநீர்ப்பையில்
(யூரினரி ப்ளாடர்) கற்கள் இருக்கலாம். ப்ரோஸ்டேட் கான்சரும்கூட
காரணமாக இருக்கலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர்ச்சியாக
பிஎஸ்ஏ (PSA) லெவலை அவ்வப்போது சோதித்துப் பார்த்தீர்களா?
சிஸ்டோஸ்கோபி முறையில் உங்கள் பிளாடரை சோதித்துப் பார்த்தால்
கற்கள் இருக்கிறதா என்பது தெரியும். என்ன காரணம் என்பதை
கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளவும்.
என் வயது 65. காது
கேட்க வில்லை. அதற்காக மிஷின் வாங்கி வைத்துக்கொண்டேன்.
அப்போதும் தெளிவாகக் கேட்கவில்லை. டீ.வி ஓடும்போது யாராவது
பேசினால் இரண்டுமே சரியாக கேட்கவில்லை. மிஷினில் ஏதாவது கோளாறு
இருக்குமா?
- எஸ். சரஸ்வதி (வாசகி முழு முகவரி தேவை)
டாக்டர் ஏ.சிங்காரம்:(காது, தொண்டை, மூக்கு மருத்துவ
நிபுணர்)
உங்களுக்கு எந்தக் காது சரியாகக் கேட்கவில்லை என்று
குறிப்பிடவில்லையே! மருத்துவரிடம் பரிசோதனை செய்தபின் தான் காது
மிஷின் வாங்கினீர்களா? அப்படி மிஷினில் பிரச்னை என்றால்
கடைக்காரரிடமே திருப்பி விடலாம்! ஆனால் மிஷின் பிரச்னை எதுவும்
இருக்காது. உங்கள் காதில் இயர் டிரம் பழுது பட்டிருக்கும்.
ஒவ்வொரு காதுக்கும் தனித்தனியாக சோதனை செய்து பார்த்து,
அதற்கேற்றபடிதான் மிஷின் பொருத்திக் கொள்ள வேண்டும்.