
பெண்கள் இரவுப் பணிக்குச் செல்வதற்கு முதல் காரணம் என்ன? பன்னாட்டு
நிறுவனங்களில் பணிபுரிய கிடைத்துள்ள வாய்ப்புகள். கை நிறைய சம்பளம்,
கணினி வேலை, பொருளா தார சுதந்தரம், சொந்தக் காலில் நிற்கும் சந்தோஷம்,
திறமைக்கான அங்கீகாரம் போன்ற பலவற்றாலும் ஈர்க்கப்பட்டு பெண்கள் இரவுப்
பணிகளை ஏற்றுக் கொள்கின்றார்கள்.
காலம் மாறிவிட்டது. ஆற்றலிலும்
அனுபவத்திலும் பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை என்று
காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலக் கட்டத்தில், ‘இரவுப் பணி’
என்ற ஒரே காரணத்துக்காக, அந்த வேலையை ஏற்றுக் கொள்ளாவிட்டால்,
பெண்களின் முன்னேற்றம் பின் தங்கிவிடக் கூடும்.
நாட்டில்
நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், குடும்பச் சூழ்நிலை, விலைவாசி
உயர்வு போன்றவற்றை ஆலோசித்தால், பெண்கள் இரவுப் பணிக்குப் போவது பயனே
என்று தோன்றக்கூடும். ஆனால்...
‘இரவுப் பணிக்குச் செல்வதால்,
பெண்களுக்கு வருமானம் கிடைப்பது ஒன்று தான் பயன்; மற்றபடி முழுக்க
முழுக்க பாதிப்பே!" என்று நெத்தியடியாகக் கூறியிருக்கும் வாசகியரின்
கருத்துகளையும் மறுக்க முடியாதுதான்!
பட்டப்படிப்பு முடித்த
கையோடு வேலை தேடும் பெண்கள், தங்களுக்கு வேறு வசீகரமான வேலை கிடைக்காத
பட்சத்தில், இரவு வேலையைத் தேர்வு செய்யலாம். அழைத்துப் போக
பாதுகாப்பான துணை யாராவது இருப்பின் பிரச்னையில்லை; மகளின் உடல்
மற்றும் மனநலத்தைப் பேணும் விதத்தில் பெற்றோர்கள் இருப்பின், இன்னும்
நன்று!
ஆனால், திருமணமான, இளம் குழந்தைகள் இருக்கும் பெண்கள்,
தனிக்குடித்தனம் செய்யும் பெண்கள், தேக ஆரோக்கியம் பேண இயலாதவர்கள்,
அனுசரணையான கணவன் வாய்க்காதவர்கள், பயந்த சுபாவமுள்ள பெண்கள்,
குடும்பம் - அலுவலகம் என்று திட்டமிட்டு பேலன்ஸ் செய்யத்
தெரியாதவர்கள், இரவுப் பணிகளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பதே சிறப்பு!
குடும்பத்தின் அச்சாணியாகத் திகழும் பெண்ணின் உடல் நலமும் மனநலமும்
பாதிக்கப்பட்டால், கெடுவது அவள் மட்டுமல்ல... மொத்த குடும்பமுமே!
